தோஷம் நீக்கும் பதிகம்


பாராயணம் பண்ணுங்க... பலனை அள்ளுங்க...

திருஞானசம்பந்தர் தேவாரம்


கண்பொலி நெற்றி யினான் திகழ் கையிலோர் வெண்மழுவான்

பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்

விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை வேதியனூர்

தண்பொழில் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 1



விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச

எரித்தவன் முப்புரங்கள் இயல் ஏழுல கில் லுயிரும்

பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளம் தன்னைத்

தரித்தவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 2



உடுத்தவன் மானுரிதோல் கழல் உள்கவல்லார் வினைகள்

கெடுத்து அருள் செய்ய வல்லான் கிளர் கீதமோர் நான்மறையான்

மடுத்தவன் நஞ்சு அமுதா மிக்க மாதவர் வேள்வியை முன்

தடுத்தவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 3



சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்

பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்துமின் பாய்புனலும்

போழ் இள வெண்மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த

தாழ்சடை யான் பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 4



விடம்படு கண்டத்தினான் இருள் வெள்வளை மங்கையொடும்

நடம்புரி கொள்கையினான் அவன் எம்மிறை சேருமிடம்

படம்புரி நாகமொடு திரை பன்மணியும் கொணரும்

தடம்புனல் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 5



விடையுயர் வெல்கொடியான் அடி விண்ணொடு மண்ணுமெல்லாம்

புடைபட ஆடவல்லான் மிகு பூதமார் பல்படையான்

தொடை நவில் கொன்றையொடு வன்னி துன்னெருக்கும் அணிந்த

சடையவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 6



மலையவன் முன்பயந்த மட மாதையோர் கூறுடையான்

சிலைமலி வெங்கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான்

அலைமலி தண்புனலும் மதி ஆடரவும் அணிந்த

தலையவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 7



செற்றரக் கன் வலியைத் திருமெல் விரலால் அடர்த்து

முற்றும் வெண் ணீறணிந்த திருமேனியன் மும்மையினால்

புற்றரவு அம்புலியின் னுரி தோலொடு கோவணமும்

உற்றவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 8



வின்மலை நாணரவம் மிகு வெங்கனல் அம்பதனால்

புன்மைசெய் தானவர்தம் புரம் பொன்றுவித் தான் புனிதன்

நன் மலர் மேல் அயனும் நண்ணும் நாரணனும் அறியாத்

தன்மையன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 9



ஆதர் சமணரொடும் மடை ஐந்துகில் போர்த்துழலும்

நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்மின் நின்மலனூர்

போதவிழ் பொய்கைதனுள் திகழ்புள்ளிரியப் பொழில்வாய்

தாதவிழும் பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 10



தண் வயல் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரத்துக்

கண்ணயலே பிறையான் அவன் தன்னை முன் காழியர்கோன்

நண்ணிய செந்தமிழான் மிகு ஞானசம் பந்தன்நல்ல

பண்ணியல் பாடல்வல்லார் அவர் தம்வினை பற்றறுமே. - 11

⇭⇭⇭