பாராயணம் பண்ணுங்க... பலனை அள்ளுங்க...
திருஞானசம்பந்தர் தேவாரம்
கண்பொலி நெற்றி யினான் திகழ் கையிலோர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 1
விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் இயல் ஏழுல கில் லுயிரும்
பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளம் தன்னைத்
தரித்தவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 2
உடுத்தவன் மானுரிதோல் கழல் உள்கவல்லார் வினைகள்
கெடுத்து அருள் செய்ய வல்லான் கிளர் கீதமோர் நான்மறையான்
மடுத்தவன் நஞ்சு அமுதா மிக்க மாதவர் வேள்வியை முன்
தடுத்தவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 3
சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்துமின் பாய்புனலும்
போழ் இள வெண்மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த
தாழ்சடை யான் பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 4
விடம்படு கண்டத்தினான் இருள் வெள்வளை மங்கையொடும்
நடம்புரி கொள்கையினான் அவன் எம்மிறை சேருமிடம்
படம்புரி நாகமொடு திரை பன்மணியும் கொணரும்
தடம்புனல் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 5
விடையுயர் வெல்கொடியான் அடி விண்ணொடு மண்ணுமெல்லாம்
புடைபட ஆடவல்லான் மிகு பூதமார் பல்படையான்
தொடை நவில் கொன்றையொடு வன்னி துன்னெருக்கும் அணிந்த
சடையவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 6
மலையவன் முன்பயந்த மட மாதையோர் கூறுடையான்
சிலைமலி வெங்கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான்
அலைமலி தண்புனலும் மதி ஆடரவும் அணிந்த
தலையவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 7
செற்றரக் கன் வலியைத் திருமெல் விரலால் அடர்த்து
முற்றும் வெண் ணீறணிந்த திருமேனியன் மும்மையினால்
புற்றரவு அம்புலியின் னுரி தோலொடு கோவணமும்
உற்றவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 8
வின்மலை நாணரவம் மிகு வெங்கனல் அம்பதனால்
புன்மைசெய் தானவர்தம் புரம் பொன்றுவித் தான் புனிதன்
நன் மலர் மேல் அயனும் நண்ணும் நாரணனும் அறியாத்
தன்மையன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 9
ஆதர் சமணரொடும் மடை ஐந்துகில் போர்த்துழலும்
நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்மின் நின்மலனூர்
போதவிழ் பொய்கைதனுள் திகழ்புள்ளிரியப் பொழில்வாய்
தாதவிழும் பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - 10
தண் வயல் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரத்துக்
கண்ணயலே பிறையான் அவன் தன்னை முன் காழியர்கோன்
நண்ணிய செந்தமிழான் மிகு ஞானசம் பந்தன்நல்ல
பண்ணியல் பாடல்வல்லார் அவர் தம்வினை பற்றறுமே. - 11