திருப்பனந்தாள் பெயர் காரணம்

  • ஊருக்கு ஒரு பெயர்; கோயிலுக்கு ஒரு பெயர் பழங்காலத்தில் வழக்கத்தில் இருந்தது உண்டு. திருப்பனந்தாள் என்ற பெயர் ஒரு காலத்தில் ஊருக்கும் கோயிலுக்கும் இருந்தது. பனை மரத்து அடியில் சுயம்பு லிங்கம் எழுந்தருளியிருந்ததால் பனந்தாள் என்ற பெயர் வந்தது. அந்த லிங்கத்தைப் பின்னர்த் தாடகை என்பவள் வழிபட்டாள். தாடகை வழிபட்ட ஈஸ்வரன் இருந்த ஆலயம் தாடகைஈச்சரம் எனப்பட்டது. ‘தண் பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே’ என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.
  • பனை மரங்கள் மிகுந்திருந்த ஊர் பனந்தாள். பனை மரத்தடியில் சிவலிங்கம். பனைமரத்துக்கு என ஒரு விசேஷம் உண்டு. தேவலோகத்தில் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய பொருள்கள் மூன்று உண்டு. ஒன்று காமதேனு என்னும் பசு. இன்னொன்று கற்பக விருட்சம். மூன்றாவது சிந்தாமணி. இந்த மூன்றும் இருப்பதே தேவலோகத்துக்குப் பெருமை.
  • கேட்டதெல்லாம் கொடுக்கக்கூடிய, நினைத்ததையெல்லாம் நிறைவேற்றக்கூடிய மரமான கற்பக மரங்களைப் பஞ்ச தருக்கள் என்பார்கள். ஐந்து வகையான மரங்களே பஞ்ச தருக்கள். கற்பக மரம், பாரிஜாத மரம், ஹரிசந்தன மரம், மந்தார மரம் ஆகியவை அவை.
  • பூலோக பாரிஜாதம் பவளமல்லிகை. பூலோகத்தில் சந்தன மரம் உண்டு. ஹரிசந்தனம் மற்றும் மந்தார மரங்கள் முறையே பெருஞ்சேரி சிதலைப்பதி என்ற தலங்களில் தலவிருட்சங்கள்.
  • பஞ்சதருக்களில் முதலாவதான கற்பக மரம் தேவலோகத்துக்குப் பெருமை தரக்கூடியது. இந்திரன் இந்த மரத்தில் மலர்ந்த பூக்களிலிருந்து சிந்தும் தேனுக்குக் கீழே வீற்றிருக்கிறான் என்பார் கம்பர். தேவலோகத்தைக் கற்பக நாடு என்றும் சொல்வார்கள்.
  • பூலோகத்தில் இருக்கக் கூடிய கற்பக மரம் எது தெரியுமா? பனைமரம்தான். சில தலங்களில் பனை மரம் தலவிருட்சம். மூன்று தலங்கள் அப்படி உண்டு. அவற்றில் விசேஷமானது திருப்பனந்தாள். பனை மரத்தடியில் இருக்கும் கற்பகம்தான் செஞ்சடையப்பர். அவரை வழிபடக் கேட்டதெல்லாம் கிடைக்கும்; நினைப்பதெல்லாம் நடக்கும். கற்பக மரத்துக் கடவுள் கட்டாயம் அடியவர் தேவைகளை நிறைவேற்றுவார்.

⇭⇭⇭