வருக...வருக!

ஊருக்கு ஒரு பெயர், கோயிலுக்கு ஒரு பெயர் பழங்காலத்தில் வழக்கத்தில் இருந்தது உண்டு. திருப்பனந்தாள் என்ற பெயர் ஒரு காலத்தில் ஊருக்கும் கோயிலுக்கும் இருந்தது. பனை மரத்து அடியில் சுயம்பு லிங்கம் எழுந்தருளியிருந்ததால் பனந்தாள் என்ற பெயர் வந்தது. அந்த லிங்கத்தைப் பின்னர்த் தாடகை என்பவள் வழிபட்டாள். தாடகை வழிபட்ட ஈஸ்வரன் இருந்த ஆலயம் தாடகைஈச்சரம் எனப்பட்டது. ‘தண் பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே’ என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.

பனை மரங்கள் மிகுந்திருந்த ஊர் பனந்தாள். பனை மரத்தடியில் சிவலிங்கம். பனைமரத்துக்கு என ஒரு விசேஷம் உண்டு. தேவலோகத்தில் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய பொருள்கள் மூன்று உண்டு. ஒன்று காமதேனு என்னும் பசு. இன்னொன்று கற்பக விருட்சம். மூன்றாவது சிந்தாமணி. இந்த மூன்றும் இருப்பதே தேவலோகத்துக்குப் பெருமை.

பூலோகத்தில் இருக்கக் கூடிய கற்பக மரம் எது தெரியுமா? பனைமரம்தான். சில தலங்களில் பனை மரம் தலவிருட்சம். மூன்று தலங்கள் அப்படி உண்டு. அவற்றில் விசேஷமானது திருப்பனந்தாள். பனை மரத்தடியில் இருக்கும் கற்பகம்தான் செஞ்சடையப்பர். அவரை வழிபடக் கேட்டதெல்லாம் கிடைக்கும்; நினைப்பதெல்லாம் நடக்கும். கற்பக மரத்துக் கடவுள் கட்டாயம் அடியவர் தேவைகளை நிறைவேற்றுவார்.

இத்தகு பெருமைகொண்ட திருப்பனந்தாள் பெருமையை அறிந்துகொள்வதற்காகவே இந்த பிளாக்...


ஊரின் பெயர்:  திருப்பனந்தாள்

கோயிலின் பெயர்:  தாடகைஈச்சரம்

சுவாமி: அருணஜடேஸ்வரர் (செஞ்சடையப்பர்)

அம்மன் பெயர்:  பிரகன்நாயகி (பெரியநாயகி)

⇭⇭⇭